Society & Culture
25-ஜனவரி - 2026- ஞாயிறு
தலைப்பு:
(KNOW) அறிதல் இல்லாத இடத்தில்( NO) மறுப்பு பிறக்கிறது
மனப்பாட வசனம்:
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)
இன்றைய தியானம்:
நாம் அறிந்ததுதான் நமது அறிவாகிறது; அந்த அறிவே நமது பதிலை உருவாக்குகிறது. தேவன் நமக்கு செயல்படும் திறனை மட்டும் அல்ல, செய்யலாமா? வேண்டாமா ? என்பதை அறிந்து தீர்மானிக்கும் உணர்வையும் கொடுத்துள்ளார். அந்த உணர்வு அறிதலிலிருந்தே பிறக்கிறது. அறிதல் கருத்தை உருவாக்குகிறது; கருத்து பதிலை உருவாக்குகிறது. உண்மையான அறிதல் இல்லாதபோது, பதில் தானாகவே (NO) இல்லை என்றாகிறது. உறவற்ற , தொடர்பே இல்லாத நிலையை மனிதன் நிராகரிக்கிறான்; தூரம் எப்போதும் மறுப்பை உண்டாக்கும்.
“தேவன் இல்லை” என்று துன்மார்க்கன் சொல்வது தேவன் இல்லாததால் அல்ல; அவன் தேவனை அறியாததாலே. இது அடிப்படை உண்மையையே மறுக்கும் ஆழமான அறியாமை.
யூதர்கள் இயேசுவுக்கு ( NO ) இல்லையென்ற மறுப்பு சொன்னதற்கும் இதே காரணம். அவர்கள் அவரை அறியவில்லை; அதைவிட மோசமாக, அவர்கள் அவரைப்பற்றி அறிய விரும்பவும் இல்லை. இந்த மனப்பான்மை அவர்களை அறியாமையிலிருந்து பகைமைக்குக் கொண்டு சென்றது. தேவனுடைய அன்பிற்கு அவர்கள் கசப்பு, வெறுப்பு, எதிர்ப்பு ஆகியவற்றால் பதிலளித்து, இறுதியில் சத்தியத்தையே சிலுவையில் அறைந்தார்கள். அறியாமை ஒருபோதும் நடுநிலையாக இருப்பதில்லை; அது ஒரு சுயநல சார்புடையது. அது அழிவை உண்டாக்குகிறது.
“ஆதாம் தன் மனைவியை அறிந்தான்” என்பது வெறும் வார்த்தையல்ல. உறவு, நெருக்கம். வேதாகமத்தில் அறிதல் என்பது நெருங்கிய உறவை குறிப்பிடும் அர்த்தம் பொதிந்த வார்த்தை. தேவனை உண்மையாக அறிந்தவர் அவருடைய அன்பின் ஐக்கிய உறவுக்கு ஒருபோதும் NO சொல்லமாட்டார்.
இன்றைய மேற்கோள் :
“தேவனை அறிதல் என்பது ஒரு எண்ணம் அல்ல; அது வாழ வேண்டிய உறவு.” — A. W. Tozer
பரிந்துரைக்கப்பட்ட நூல் :
Knowing God — J. I. Packer (அத்தியாயம் 2)
கிறிஸ்தவ விசுவாசம், நாம் தேவனை எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்பதில் அல்ல; தேவன் நம்மை அறிந்திருக்கிறார் என்பதில்தான் அடிப்படை கொண்டுள்ளது.
“நான் தேவனை அறிந்திருக்கிறேன் என்பதல்ல முக்கியம்; தேவன் என்னை அறிந்திருக்கிறார் என்பதே மிக முக்கியம்.”
இந்த புத்தகத்தை படிக்க கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தவும்
( https://t.me/EnglishChristianPDFs/20769 )
ஜெபம்:
கர்த்தாவே, என்னை உம்மிடம் நெருங்கி ஜீவிக்க தகுதியுள்ளவனாக்கும். அறியாமையை அகற்றி, உண்மையான அறிதலை , அறிவை தாரும். ஆமென்.
உங்களுக்கு ஒரு வார்த்தை :
அறிதலுக்கு தூரம் அல்ல, நெருக்கமே தேவை. அறிதலுக்கு திறமை தேவையில்லை, அமைதியான நேரம் தேவை.
அறிதல் வலுப்படுத்தும் முன் இருதயத்தை வெளிப்படுத்தும். அறிதல் வாதங்களை அல்ல, கீழ்ப்படிதலை உருவாக்கும். அறிதல் NO வை “ஆம் ஆண்டவரே” என்று மாற்றும்.
ஜெபத்துடன்
பாஸ்டர் மரிய ஜோசப்
போன்: 9243183231

